சிரிய ராணுவ வீரர் ஒருவரின் இதயத்தை போராளி ஒருவர் மென்று தின்னும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் உலா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். இந்நிலையில், போராளிகளிடம் பிடிபட்ட ராணுவ வீரர் ஒருவரின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுத்து ஒரு போராளி மென்று தின்னும் வீடியோ காட்சி இணையதளங்களில் உலா வருகிறது. பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவனான அபு சக்கார் என்பவன், ராணுவ வீரரின் இதயத்தை மென்றபடியே ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான ராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்’ என்று வெறித்தனமாக கூச்சலிடும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோவை கண்ட மனித உரிமை அமைப்புகள் மற்றும் அதிபருக்கு ஆதரவான இயக்கங்கள் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இச்செயலுக்கு அவர்கல் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.